42, அடிமைத்தனத்திற்கு அவள் முதலெதிரி; அதனால் நானும்!!

மிருகங்கள் மிருகங்களாக வாழும் ஊரது
மனிதர்கள் மிருகங்களாகவும் மாறிய நாடது
மிருகங்கள் மனிதர்களோடு பழகப்பட
மனிதருக்கும் மிருகத்திற்கும் நடுவே
சில மனிதர்களும் மிருகங்களுமாய் – நானும்; அவளும்;

நவீன ஆடைகொண்டு மறைத்தும்
மறைக்காமல் அவளும்
உடம்பு மூடியதை கிழிக்கும் பார்வையுடுத்தி நானும்
சிரிப்பை அணிந்த உடம்பாய் அவளும்
காதலின் இலக்கணத்திற்கு எதிரே நடக்கிறோம்;

அவளுக்கு நான் பிடிக்கும்’ என் ஆண்மை பிடிக்காது
அதென்ன ஆண்மையெனில் சிறப்பா? அப்போ
பெண்மையும் சிறப்பு தானே?’ என்பது அவள்
அடிக்கடி கடித்துகொள்ளும் மிளகாய் கேள்விகளில் ஒன்று;

‘பெண்மை சிறப்புதானே, அதை ஏனப்படிக்
காரமாய் கேட்கிறாய்’ என்பேன்

‘ஆண்மையை தூக்கி தலையில் வைத்தாடுபவர்களின்
கால்களுக்கிடையே பெண்மை நசுக்கப்படுவதைக்
காண்பவரெவர்?’

இது அவளின்
விடுதலை வெப்பப் பற்களில்
கடிபடும் இரண்டாம் மிளகாய்..

காதல் சர்க்கரைத் தூவி
இதயங்களை சேர்த்துவிட்டால்
அடிமைத்தனம் அன்பினில் அடிபட்டுப் போகும் வா’ என்பேன்

இப்படி -
மிளகாய் சிவப்பில் அடிக்கடி ரத்தமும் வடியும்
ரத்தத்தை முத்தத்தால் காதலால் நனைத்தெடுப்போம்

மீண்டும் அவள் கேட்பாள் “ஆண்கள் ஏன் எஜமானர்களா?”
இல்லை என்று சொல்லிப் பயனில்லை; ஆமென்றால்

ஏன்
அதெப்படி
என்ன அவசியம்
யார் ஆக்கியது அவர்களை யென
ஆயிரம் சொற்களைக் கோர்த்து
ஒற்றைப் பார்வையில் பார்ப்பாள்;

பார்வை சுடும்
வார்த்தை சுடும்
எண்ணம் கொதிக்கும்
ஆயினும் மனதால் வருடிக் கொடுப்பவள்
தாயன்பில் சொக்கவைப்பவள்
குணம் வேறு மனம் வேறு தானே அதை மறப்போமென
விட்டுவிட்டு அவளோடு நடப்பேன்;

எனக்கென விட்டுக் கொடுப்பதாய் எல்லாம் நினைக்காதே
உன் உணர்வு உனக்கு
என் உணர்வு எனக்கு’ என்பாள்

‘அது தான் தெரியுமே..’

‘என்ன தெரியும்?’

‘பெண்ணெனில் தேவதை
ஆண் என்ன ஆண், பெண் தான் தாய்மை கொண்டவள்
புனிதமான மனதாள் பெண்
அவளால் தான் ஒரு ஆணை தாங்கிக் கொள்ள முடிகிறது

நீயும் பெண் தானே
ஆணை வெறுத்தாலென்ன
பெண்மையின் உணர்வு பூத்தவள் தானே நீயும்’ என்பேன்

வாய்மூடுவதற்குள் வார்த்தைகளின் ஈட்டி பாயும்
என்ன பெண்? என்ன பெண்?
பெண்ணென்றால்? பாவமா? விட்டுக்கொடுக்கிறாயா?
யாரடா நீ; யார் நீ; எது வழி வந்தாய்?
யாருக்கு விட்டுக் கொடுக்கிறாய் ? எனக்கு விட்டுத் தர நீ யார்?
எனக்கு தூபனைத் தூவ நீ யார் ?
பெண்ணை நேரே இப்படி ஆராதிக்க அசிங்கப்பட மாட்டாயா நீ?

நான் சொன்னேனா? நீ தான் அழகன்
நீ தான் உயிர்
உன் அழகில் சொக்கி உன் பின்னால் நடக்கிறேன்
நானென்று சொன்னேனா?
நீயில்லை என்றால் ஒரு உலகம் இருண்டு போகுமெனில்

அதை தூக்கி எரிபவள் நான்; தெரியுமா உனக்கு?
என்ன நினைத்தாய் பெண்ணெனில்?

நினைத்தால் அழைப்பாய்
படுப்பாய்
கலைப்பாய்
நாங்கள் கையில் மூடிக்கொண்டுப் போன ஆண்டுகளைப் பார்
தலைமுறை தலைமுறையாய் -
நசுக்கப்பட்டுக் கிடக்கிறோம்; போதாதா?
இதோ, காலில் போட்டுவிட்டோம்; பார்க்கிறாயா இனி?
பெண்ணெனில் யாரென்று பார்க்கிறாயா?

அவள் வாயை மூட ஒரு முத்தம் போதுமானதாக
இருந்தது;
அதற்கு உரிமை மறுப்பவளல்ல அவள்
ஆனாலவள் விழுங்கியிருந்த ஆண்களின் மீதான கோபத்தில்
என் பாட்டன்கள் வைத்த சூடு அதிகமிருந்ததால்
முத்தங்களை மறுத்துக் கொண்டேன்,

மூத்தக் குடிமீதேறி
இறங்கி
காரி உமிழ்ந்தது
அவளின் இரு கண்களும்,

நகக்கண் இன்றி கீறிய நிறைய விரல்களின் பதிவு
அவளின் கன்னக் குழியோரம்
வரிவரியாய் பதிந்து கிடக்க – எளிதாய் துடைத்துவிட
என் போன்றோர்களின் புரிதலோ பண்போ பாசமோ
அத்தனை போதுமானதாக இல்லை;

அவள் நூறு பேய்களின் பசியில் பார்த்தாள்
அவள் பார்ப்பதன் கோபத்தில் அத்தனை ஆண்களின்
கயமைத்தனம்
பெண்களை ஓர் காலச் சங்கிளியில் கட்டிப் போட்டதன்
குற்றத்தை அடக்கிய பெரும் பழி
எதிர்க்கப் போதாத திராணியில் திமிரி கிடந்தது;

குடித்துவிட்டு அடித்தவன்
பெண்ணெனக் கலைத்தவன்
பெண்தானே என்று அழைத்தவன்
பெண்; பெண்; படிப்பெதற்கு? போ சமையென்று சிரித்தவன்
சமைந்ததை சடங்காக்கியவன்
சம்சாரி, சம்சாரியல்லாளென்று பிரித்தவன்
கலப்பில் கற்பினைப் புதைத்தவன்
புதைத்த கையாலே பின்வந்து கற்பை பறித்தவன்
பின்னொரு நாளில் கற்பின்மைக்கு நகைத்தவன்
கர்ப்பத்தின் மீது உதைத்தவன்
கர்ப்பத்தைக் கலைக்க காதலித்தவன் என
அத்தனை வக்கிரங்களின் மீதும் ஏறி நின்றுக்கொண்டு
என் மேல் பாயும் ஈட்டிகளில்
வஞ்சக் கணக்குத் தீர்க்க தயாரானாள்;

அவளை எனக்குப் புரிந்தது
அவளுக்கு முன் அழுத அநேக பெண்களின் அழுகை
அதிலிருப்பது புரிந்தது
இனி பிறக்கும் ஆண்களின் பார்வையில்
பெண் ஒரு சுதந்திரத் தீயெனக் காட்ட – அவள் உயர்த்திப் பிடித்த
வார்த்தைகளின்
வெப்ப சுவாலையில்
காதலை வெளிச்சமாக மட்டும் கண்டேன் நான்;

நான் பேசவில்லை வா போகலாமென்றேன்
மௌனமாக நடந்தாள்
ஒரு புற்தரை பார்த்து அமர்ந்ததும்
என் கைகளைப் பற்றிக் கொண்டாள்

நேராக என் கண்களை ஆழமாகப் பார்த்து
‘இன்று மாலை
ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட பெண்களைத் திரட்டி
ஒரு போராட்டம் நடத்தப் போகிறேன், வருவாயா’ என்றாள்

‘ம்ம்.. போகலாம்’ என்றேன்

எழுந்துக் கொண்டோம்
கைவீசி நடந்தோம்..

‘என்னைப் புரிகிறதா?’ என்றாள்

‘ம்ம்.. புரிகிறது’ என்றேன்

‘என் அப்பாவும் ஒரு ஆண் தான்’ என்றாள்

சிரித்துக் கொண்டேன்

‘என் அப்பாவில் கூட எனக்கு தாய்மை தெரிகிறது
அது பிடிக்கிறது
என் கோபம் என் அப்பாவின் மீதல்ல
எனது அம்மாவின் கணவர் மீது;

கணவர்களுக்கு
மனைவி எனும் பெண் என்று துச்சமானாளோ
அங்கிருந்து வருகிறது எனக்கான கோபம்’ என்றாள்;

நானென் கைகளை நீட்டி
‘ம்ம் என் கைகளைப் பிடித்துக் கொள்’ என்றேன்

அவளென்னைப் பார்த்தாள்

‘நீ விரும்பினால் பிடித்துக் கொள்’ என்றேன்
என் கையைப் பிடித்து தன் விரல்களோடு பின்னிக் கொண்டாள்

‘உன்னை எனக்கு மிகப் பிடிக்கும்
நீ கூட என் அப்பா மாதிரித் தான்
எனை இரண்டாவதாய் தாங்குபவன் நீ’ என்றாள்

நான் சிரித்துக் கொண்டேன்

‘எனை உனக்குத் தெரியும்
உன்னை எனக்கு நம்பமுடிகிறது’ என்றாள்

சிரித்துக் கொண்டேன்

‘ஏன் பேச மறுக்கிறாயா?
பேசு..
பேசுடா என்று சொன்னால் விரும்புவாயா? வேண்டாம்
அது வேண்டாம்
டா.. டி.. யில் ஒரு உதாசீனம் வருகிறது
சர்வசாதாரணமாக அதற்குள்லிருந்து
அகந்தை துளிர்த்து விடுகிறது
எனவே வா.. போ.. போதும், அன்பு அடியாழம் தொடுமிடத்தில்
உரிமை மீறிக் கொள்ளலாம்
அதற்கென பேசாமல் எனக்கு தலையாட்டி நிற்காதே
நீயும் பேசவேண்டும்
சம உணர்வு புரிந்து பகிரவேண்டும்
இன்னொரு அடிமையை தோற்றுவிப்பதற்கல்ல
இதுபோன்ற
என் கோபம்’

‘புரிகிறது
நீ பேசு
நீ பேசினால் தான்
பேசாதோரின் விலங்கு உடையும்
நீ பேசினால் தான் பட்ட அடியின் ஆழம்
எதுவரை என்று காட்டுவாய்
நான் வலிக்கும் என்று சொல்வதைவிட
நீ வலிக்கிறதென்று காண்பிப்பது உரைக்கும்’

அவள் மௌனமானாள்
உதட்டில்
அவளை சரியாக உணர்ந்த என் காதல்
நனைந்து புன்னகையாகப் பூத்துக் கொண்டது அவளுக்கு

எனக்குத் தெரியும்
அவள் கோபம் தீருமிடத்திலிருந்து பல
சுதந்திரப் பறவைகள் வானில்
வெளிச்சம் நோக்கிப் பறக்குமென்று
எனக்குத் தெரியும்
அதற்கு அவளோடு சமமாக நடப்பதில் எனது
செய்யாது சேர்ந்த பாவமும் தீரட்டுமென்று எண்ணினேன்

அதற்குள் என் அம்மா அழைத்தாள்

அலைபேசி பார்த்து அம்மா என்றேன்

பேசு என்றாள்

‘என்னமா…’ என்றேன்

‘உனக்கொரு பெண் பார்த்து வந்தோம்பா’ என்றாள்

‘ஏன் அவளுக்கொரு
ஆண் பார்க்க அவர்கள் வரவில்லை யென்று’ தோன்றிற்று

‘என்னப்பா, ஏன் பேசாமலிருக்கிறாய்
அத்தனை அழகு அவள், அடக்கமானவள்
என்ன சொல்கிறாய் முடித்துவிடலாம் தானே’ என்றாள் அம்மா

‘இல்லைமா, என்னை ஒரு பெண்ணிற்குப் பிடித்துள்ளது
எனக்கும் அவளை மிக பிடிக்குமென்றேன்

அவள் என் தோள்மீது சாய்ந்துக் கொண்டாள்
தாங்கிக் கொண்டிருப்பதாய் எண்ணாமல் நடந்தேன் நான்

என்னிரண்டு கால்களும்
அவளினிரண்டு கால்களும்
ஒருசேர நடக்கத் துவங்கிற்று..

எங்களின் காலடிப் புழுதி பறந்து
யாரை யாரையோ எச்சரிக்கைத் துணிந்திற்று
யார்யாருக்கோ சிரிப்பைப் பரிசளிக்கத் துவங்கிற்று..

ஒருவர் கால்களை ஒருவர்
பார்த்துக்கொண்டே நடந்தோம்..

எங்களின் காலடி சப்தத்தில்
யாதொரு அடிமைத்தனமுமில்லை

இடதுகால் வலதுகால்போல
எங்களின் இரண்டு கால்களும் நடக்க நடக்க
சிநேகம் மட்டும் கைகளுள் இறுகிக் கிடக்க
மனதைப் பின்னிக் கொண்டு -
மாலைப் போராட்டத்தை நோக்கிச் செல்கிறோம்;

எங்களின் பின்னால் நிறைய ஆண்கள்
வந்துக் கொண்டிருந்தனர் பெண்களோடு!!
——————————————————
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 4 மறுமொழிகள்

41, மரணத்தின் மாறாத வாசனை – வித்யாசாகர்!

து ஒரு கொடிய நாள்

அன்று தான்
முதன் முதலில் ஒருவரின்
மரணம் பற்றி கேள்வியுற்றேன்

அவர் இறந்துவிட்டார் என்றார்கள்

இறப்பதென்றால் என்ன என்றேன்
இறப்பதெனில் –
இல்லாதுபோவதென்றார்கள்

இல்லாதுயெனில்
இங்கிருந்து இல்லாமல் போவதா
அல்லது எங்குமே இல்லாதுப் போதலா? என்றேன்

அறிவிருக்கா உனக்கு? தத்துவம் பேசுமிடமா-யிது?
அவர் என்னை கடிந்துப் பேசி பின் முறைக்கவும் செய்தார்

நான் விலகிச் சென்று
கூட்டம் நிரம்பி நின்று அழும் அந்த வீட்டிற்குள் நுழைந்தேன்

அங்கே கதறி கதறி அழுகின்றனர்
இறந்தவரின் வீட்டார்
அக்கம்பக்கமெல்லாம் கூட கண்ணீர் வழித்து வழித்து வீசி
அழுது கொண்டிருந்தது
அம்மாவும் அங்கே நின்று கதறியழுதாள்
அண்ணா அண்ணா என்று அவரைப் பார்த்துக் கதறினாள்
கேட்டதற்கு ‘என்றோ சிறு வயதில் அவர்கள்
ஒருசேர விளையாடிய நட்பென்றாள்

என்னால் அங்கே ஒரு கணம் கூட
நிற்க இயலவில்லை
ஊரார் அழ, அம்மா அழ
அழை எனக்குப் பெரிதாக வலித்தது
எனக்கும் அழை அழையாக வந்தது

அழுதுகொண்டே வெளியேவந்த அந்த நாள்
மரணம் என் பின்னாலும்
தொடர்ந்து வந்த நாள் போலும்..

உண்மைதான்
உண்மையாகவே அன்றிலிருந்து
மரணம் என் பின்னாலும் வரத் தொடங்கிற்று

பின்னால் வந்த மரணம்
பின் மெல்ல வீட்டிற்குள்ளும் தங்கிப் போகுமென்று
அன்றைக்கெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை

இன்று
மரணமென் வீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து
என் தலையில் ஏறி நிற்கிறது

அம்மா இறந்தாள்
அப்பா இறந்தார்
உற்றார் உறவினர் உடன்பிறந்தோர்
வீட்டில் வெளியில் என
கண்முன்னே நிறையப்பேர் இறந்தார்கள்
நான் மட்டும் இறக்காமலே அழுதுகொண்டு நிற்பது
எப்படி வாழ்வின் சாத்தியமாகிப் போனதோ (?)

கேட்டால் விதி
தலையெழுத்து என்கிறார்கள்
இந்த விதி, தலையெழுத்து, மரணம்
மண்ணாங்கட்டியை எல்லாம் எவர் திணித்தார்?

பிறந்து அழுது அழுது
அழுதே யிறப்பது எத்தனை வலி?

காலத்திற்கும் வலிக்கும் மரணத்தின்
வலியோடு பிறந்த மனிதன்
எத்தனைச் சாபத்திற்குரியவனோ (?)!

உண்மையில் -
உயிர்பிரிதலினும் கூடுதல் வலி
உடனிருப்போரைவிட்டு விலகுவது,
பிரிவதென்பது,
பிரிவதென்பது பெரு வலி
சாபத்தின் பெருவெளி

அந்தப் பெருவெளியில்
பிரிவின் பெரு வலியினூடே நகர்கிறது அந்த நாள்
அந்த நாளின்
அக் கொடிய நாளின் நினைவுகள்
நினைக்க நினைக்க வலிக்கும் மரணமென வலுக்கிறது;

ஒருவேளை என் மரணமும் அப்படித் தானோ
அத்தனை நீளமோ
சொட்டி சொட்டி கடைசியாய் விழுமந்த துளி நீரோடு
உருவி
ஒரு எழுத்தென வீழுமோ;

அப்படி வீழுமெனில்
நிச்சயமந்த வீழும் கடைசி எழுத்தின் முதற்புள்ளி
மரணத்தை முதன்முதலாய் முன்மொழிந்த அந்த கொடிய நாளின்
விடிகாலையாய் மட்டுமேயிருக்கும்…
—————————————————————–
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 4 மறுமொழிகள்

40, இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம்!

ண்ணிற்கு சண்டையிட்ட வாள்களின் ரத்தம்
இன்னும்  காய்ந்திடாத மனத்திரையில்
விரிகிற காட்சிகளில் மரணமின்னும் நிகழ்கிறது
மரணத்தின் பெயர்தான் கொலையில்லை;

சொற்களின் வசியத்தில் அசைகின்ற தலைகளில்
சரிதவறு சிந்திக்கப்படாத அங்கீகரிப்பில்
நடக்கின்றன கொலைகள் -
உயிர்போதலுக்குப் பெயர் மரணம் மட்டுமே;

மண்ணுக்கும் பெண்ணுக்கும் வீங்கிய இதயம்
தனக்கென்று துடித்து துடித்தே சுடுகாடுமுட்டும்
அழுது புலம்புதலில் அடுத்தவன் ரத்தமோ கண்ணீரோ
போனது போனபடியே நகர்கிறது காலம்;

யாருக்கு யாருண்டு
யாரின் அசைவில் யாருக்கு வலிக்கிறதிங்கே
யாருமில்லா தனியுலகில் எவர்குறித்து யெண்ணியழ -
இத்தனை  இத்தனைச் சுயநலமோ?!!!

சோற்றிற்கு சண்டையிட்டு சொத்துக்கு கொலைசெய்து
பாட்டிற்கு கடல்தாண்டி படத்திற்கு வீடு விற்று
வேலைக்கு லஞ்சம் கொடுத்து ஏழையின் ரத்தமருந்தி
காதலுக்கு வீடுவிட்டு கட்டியவளை தெருவில் நிறுத்தி

ச்சி……….. மனிதர்களா நாம்?

மனிதம் நிரம்பிய -
உணர்விற்குத் தக வாழ்க்கையையா வாழ்கிறோம்?

பிறர் நல அக்கறையின்றி பிறப்பவர் யாருமிலர்
பிறர்நல னெண்ணாதார்  இறப்பதில் வருத்தமுமில்லை
பிறருக்கு ஈயாதான் இருப்பதில் ஏதுமில
உயிர் அது இழுத்து இழுத்து ஒருவீட்டில் விளக்கெரிய -

வீடு சுற்றியொரு அடர்ந்த இருட்டுப் படருமெனில்
விட்டுத் தொலையதை;

கனக்கும் சுடு காடுதனில் -
துளிர்க்கட்டும் புதிய மனிதம் உனக்கும் எனக்கும் பிறருக்குமாய்..
—————————————————————–
வித்யாசாகர்

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மறுமொழியவும்

39, கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்..

து ஒரு சொட்டு சொட்டான மரணம்
வட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்டுவதும்
மகிழுந்து வாங்குவதும் அப்படித்தான் – அது ஒரு
சொட்டு சொட்டான மரணம்;

அதிலும் போறாத காலம்
வாங்கிய வண்டி பழுதுபட்டு வீழுமெனில்
பணம் கட்டி மீட்பதைக் காட்டிலும்
உயிர் விட்டொழிதல் கூடுதல் சுலபம்;

வேறென்ன -
வாழ்க்கையில் முதல் முதாலாய்
வாங்கிய மகிழுந்தில் அதிகம் போன இடம்
பணிமனையென்றால் வலிக்காதா?

ஒரு மிதிவண்டியில்
மணி மாற்றும் கதையல்ல அது; மகிழுந்தில்
ஒரு பொருள் மாற்றுவது,
ஓடும் இதயம் நின்று ‘ஐயோ என துடித்துவிடும் வலியது’ என்று
மகிழுந்திற்கோ -
பணிமனைகளுக்கோ எக்காலும் புரிவதில்லை;

அறுத்து அறுத்து சதையை
பிய்த்துக் கொடுப்பதுபோல்
பணத்தைப் பிடுங்கி பிடுங்கி
அழ வைக்கிறது ‘கடனில் வாங்கிய பழைய வண்டியும்
கட்டி  கட்டி ஓய்ந்திடாத வட்டியும்;

உறங்கி விழிக்கையில்
ஒரு பயம் வண்டியைக் குறித்தும் வந்துவிடுவது
நடந்து ஏறி -
பல மலைகளைக் கடப்பதைக் காட்டிலும் வலிது;

திடீரென ஏதோ போய்விட்டது
இத்தனை ஆயிரம் செலவாகுமென்று சொல்லி சொல்லி
ஐந்து பத்து கணக்குப்போல பிடுங்கி
ரத்தம் குடிக்கும்
பணிமனை குறித்த பயத்தில்
திகிலாக அடிக்கடி கனவு கூட வருவதுண்டு

யாரை நம்புவது
நம்ப மறுப்பது என்றே
புரியாதளவு மனிதர்களை – இந்த பணிமனைகளும்
அடையாள படுத்துகின்றன என்பது
தற்காலிகமாக கண்டுநோகும் வலியிலொன்று;

அண்ணாயெனும் வார்த்தைக் கூட அவர்களுக்கு
அடுத்த பணம் சுரண்டலுக்கான ஆயுதமென்றுப் புரியவே
ஒரு மகிழுந்து வீணாகி
இரு மடங்கு செலவாகி – பின்
அரைவிலைக்கு அதை விற்கப் படுதல் கொடுமையில்லையா?

அப்படி எதற்கு இயலாதவனுக்கு
எவரெஸ்டில் ஏறி -
தேனீர் பருக ஆசை? என்று ஒரு கேள்வி
பார்ப்போருக்கு வருவதுண்டு,

இது ஒரு ஆசை அல்ல, கனவு
முட்டி மோதி கட்டும் வீட்டைப் போல
இருபது வருடம் நடந்து நடந்து தேய்ந்த கால்களுக்கு
ஒரு நாளேனும் அமர்ந்துபோகும் ஆயுள் கனவு;

பெரிய மனிதரென்று எண்ணி நம்மைப்
பார்பவர்களுக்கு தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ள
ஆசைப்பட்ட அற்ப அறிவின் விளைவு;

வாடகைக் காருக்கு பணம் தந்து தந்தே
பாதி சம்பளம் போனதாய் எண்ணி வருந்தியதில்
தனைமீறி வந்துவிட்ட சோர்வு;

எங்கு  மகிழுந்து இல்லையேல்
வேலையில்லை என்று திருப்பி விடுவார்களோ என
பாலைவன வாசலில் நின்று பயந்த மனதிற்கு
‘வாங்கித் தான் பார்ப்போமே’ என்று கொண்டிட்ட
அசாத்திய துணிச்சலின் கனவு அது;

அதற்காக,
கனவெனில் என்ன; பணத்திற்கு உடனே கால் முளைத்துவிடுமா
சக்கரம் உருள உருள தேயும் கால்போல
வட்டி கட்ட கட்ட உயிர் சொட்டிப் போகாதா?

என்ன சொட்டும்?
என்ன சொட்டும்?
வட்டி கட்டி வண்டி வாங்கியது
எத்தனை மடத்தனம்?

ஆம்; மடத்தனம் தான்
மடத்தனம் தானென்று ஒரு ஐந்து மாதத்திற்கு முன்பு
தெரிந்திருக்குமேயானால்
இந்த வட்டிக்கு வாங்கிய பணத்தில்
இந்த வெளிநாட்டு வாழ்க்கையின் ஒரு வருட வதை
கொஞ்சம்  குறைந்திருக்கலாம்;

என்றாலும், அதெல்லாம் அன்று
வாங்கியப் போது புரியவில்லையே
ஏறி அமர்ந்து கண்ணாடி மூடி
குளிர்காற்று முகத்தில் அடிக்க
பாட்டு கேட்ட சந்தோசத்தின் விலை இன்னதென்று அன்று
எண்ணத் தோன்றவில்லையே;

இன்று மட்டுமென்ன
இன்று என்னதான் புரிந்தாலும் கூட
இன்றும் இதை விற்றுத்தொலைக்க முடியவில்லையே,
மகிழுந்தை ஒரு ஓரம் நிறுத்திவிட்டு -
இருக்கையில் சாய்ந்து யோசிக்கிறேன்,
நீந்திக் கடந்துவந்து நடுக்கடலில் நிற்பவரின் பிரம்மிப்பில்
பெருமூச்சொன்றைவிட்டுத் தீர்த்து மீண்டும் புறப்பட எண்ணுகையில் -

இலவசமாகக் கேட்கிறது அந்த இன்னொரு சப்தம்
சப்தத்தோடு ஆடியது வண்டி
யாரோ தூக்கி குலுக்கியது போல குலுங்கியது
இழுத்து இழுத்து ஓடி நின்று ஓடி
இதோ படாரென ஒரு உதை உதைத்து விட்டதுபோல்
காற்றில் சட்டென அணைந்த விளக்குபோல்
வண்டியும் நின்றுபோனது;

இறங்கி ஒரு ஓரம் நிற்கிறேன்
என் மகிழுந்து தனியே அனாந்தரமாக நிற்கிறது
என் பணமெல்லாம் வட்டிமொத்தமும் சேர்ந்து
காற்றில் படபடவென அடித்து ஒவ்வொரு தாளாக
பறப்பதுபோல்  ஒரு உணர்வு என் கண்முன் காட்சியாகிறது;

நான் அதிலிருந்து ஒற்றைத் தாளைக் கூட எடுத்துக்கொள்ள
விரும்பாமல் ‘எல்லாம் பறந்து போ.. போ’வென்று சபித்துவிட்டு
திரும்பிப் பார்க்காமல் விர்ரென்று நடக்கிறேன்;

எங்கோ என்றோ நான் எவர் பணத்திலேனும்
சிரித்து மகிழ்ந்திருக்கலாம்
அதற்கு இந்த இழப்பு ஈடாகிப் போயிருக்குமென்று’ எண்ணிக் கொண்டு
தெருவைக் கடந்து நிற்கிறேன்
ஒரு அரசு பேருந்து வருகிறது
சட்டைப் பையில் கைவிட்டுப் பார்க்கிறேன் – பயணச் சீட்டு வாங்க
சில்லறை இருந்தது;

கண்களை அழுந்த மூடிக் கொண்டேன்
உள்ளேயிருந்த இருட்டில் -
மகிழுந்திற்கான கனவு கொஞ்சமும் இல்லை..

வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 மறுமொழிகள்

கடற்கரையோரம் பாண்டிராஜின் பசங்களும்; நம்ம படிப்பும் (மெரினா)

விடுதலையின் வெப்பம் தணியாத மண்ணினோரம் அலைந்து அலைந்து திரியும் கடலலைகளைப் போய்க் கேட்டால் அதற்குக் கூட மறந்திருக்கும் அங்கே வாழ்ந்தவர்களின் முகங்கள். அப்படி முகம் மறக்கப்படும் இடத்தில் உயிர்பதித்து வாழும் இதயங்களைப் பற்றி படிப்பின் வழியே பேசுகிறது ‘பசங்க’ திரைப்பட இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரீனா’ திரைப்படம்.

நட்பின் வாசமருந்துவிடாத காலத் தாமரையின் இதழ்கள் ஒவ்வொன்றிலும் சிறந்த நண்பர்களாக பதிகிற பாத்திரப் படைப்புகள் நிறைந்த சிறந்த குழந்தைகளுக்கான இன்னொரு திரைப்படமிந்த ‘மெரீனா’

காதல் பறித்தாலும் பறிக்காவிட்டாலும் ஒரு கட்டத்தில் வாடிப்போகுமொரு மலர்; அதை வாசமுள்ளவரை நுகர்ந்து, வாடிய பின் அதிலிருந்து தெளிந்தும் கொள்வோர் வாழ்க்கையின் அடுத்தப் பக்கத்திற்கு அநிச்சையாய் நகர்ந்துக் கொள்கின்றனர் என்னுமொரு பாடத்தை காட்சிகளாக உள்ளடக்கி முடிகிறது இம்மெரினா திரைப்படம்.

படிப்பு ஒன்று மட்டுமே வரையறைக் கடந்த புகழ், படிப்பு ஒன்று மட்டுமே மறந்தாலும் மதிப்பை சேர்க்கும் உழைப்பு, படிப்பு மட்டுமே பிறப்பிடத்துக் கோடுகளை அழித்து வெற்றியின் சாட்சிகளோடு ஒருவரை மற்றவரிடத்தும் சரிசமமாக்கி நிற்கவைக்கிறது’ அதை வயிற்றிற்கு ஒரு வேளைச் சோறு வேண்டி உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ‘உயிர்பொக்கிஷமாய் கொடுக்க திரைப் பிரயத்தனம் கொண்டு உருவாக்கிய அரிய முயற்சியின் நற்பலனிந்த ‘மெரினா’ திரைப்படம்.

காதல் லீலைகள், காமக் குற்றங்கள், கடவுள் பிரச்சாரங்கள், கட்சிப் போராட்டங்கள், குடிசைவாசிகளின் கண்ணீரில் நனைந்த பல இதயங்களின் வாழ்ந்த தடங்கள் என அனைத்தையும் மிதித்துக் கொண்டு கடக்கும் உப்புக் காற்றின் அசைவுகளுக்கிடையே இன்றும் அனாதையாய் விழும் பிணங்களின் மரணவலிக்கு காரணமானவர்களைப் பிடித்து; முதியோரைக் காப்பாற்ற இயலாத பிள்ளைகளை மனசாட்சியின் கூண்டில் நிறுத்தி காரி உமிழ்கிறது. அவர்களின் கை கொண்டே அவர்களின் குற்றத்தின் கண்களில் குத்தும் விரல்களென ஒரு முதியவரின் பாத்திரத்தின் மூலம் வீரியம் கொள்கிறது இந்த ‘மெரினா’ திரைப்படம்.

சாதாரண மக்களின் கதையை படைப்பாக்கிச் செல்வதன் மூலம்’ இக்காலத்தின் ஒரு மூலப் பதிவு நிலைக்கப்பெறுமென்றும், அவர்களின் வாழ்க்கையை நல்ல திசை நோக்கி முடுக்கிவிட்ட பயனும் திரைப்படத்திற்கு மிஞ்சுமென்றும் நம்பியிருக்கிறார்போல் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். அவரின் நம்பிக்கையை குறையின்றி காப்பாற்றி இருக்கின்றனர் சிறுவர்களாக நடித்த குழந்தை நட்சத்திரங்கள். அந்த தாத்தாவக நடித்த ஐயாவும் சரி, பாட்டுக்காரராக வந்தவரும் சரி, தபால்காரராக வந்தவரும் சரி பாத்திரங்களின் நடிப்பு பிசகாத ஒரு இடத்தை தனது தனித் திறனாலும் தக்கவைத்துள்ளனர்.

பெரிதாக சொல்லுமளவிற்கான கதாநாயக நாயகியின் அவசியமொன்றும் அத்தனை இப்படத்தில் இல்லை என்றாலும் சோற்றுத் தட்டில் வைக்கும் ஒரு பகுதி இனிப்பு போல தன் பங்கினைத் திரமாக செய்துள்ளனர் சிவகார்த்திகேயனும், ஓவியாவும்.

ஐயா ஜெயப்பிரகாஷ் அவர்கள் ‘பசங்க’ திரைப்படத்தில் நெஞ்சில் குத்திக் கொண்ட மதிப்புக்கு நிகரான ஒரு மெடலை இப்படத்திலும் விட்டுச் செல்லவில்லை. அவர் வந்துசெல்லும் ஒரு இறுதிக் காட்சியில் ‘யாரும் இத்தேசத்தில் அனாதையில்லை, உங்களுக்கு அரசு இருக்கிறது. அரசு அத்தனையும் கொடுத்து இருக்கிறது. கொடுத்ததை எடுத்து உடுத்தி தனை திருத்திக் கொள்ளும் திறனும் பெற்றவர்கள் நீங்கள் பிள்ளைகளே, படிப்பை சுமக்கும் வயதில் உழைப்பை உங்களுக்குள் திணிக்காதீர், படிக்க மறவாதீர், படிப்பு உங்களையும் எங்களையுமென சேர்த்து நம் எல்லோரோடு நம் நாட்டையும் வளர்க்கிறது’ வாருங்கள் பாடசாலை செல்வோமென்று மிடுக்காக அழைக்கிறார்.

ஆக சிறுவர்களின் குறும்பு, வளர்பவர்களின் திறன், வறுமையின் கொடூர முகம், சரியாக வளர்க்காததன் குற்றம் என ஒரு உளவியல் சாட்சியினை சில காட்சிகளாக முன்வைத்து எல்லாக் குழந்தைகளுக்கும் படிப்பும், அவர்களைப் பற்றிய அக்கறையும் மிக முக்கியம் என்பதை மனதில் அழுத்தமாக பதியவைக்கும் இதுபோன்ற திரைப்படங்களை நன்றியுடன் திரையரங்குகளில் சென்றுக் காண்போம்.

இனி வரும் சமுதாயம் படிப்பினால் வெகு விரைவாக நகர்ந்து வாழ்வின் சிகரத்தை எல்லோருமாக எட்டிப் பிடித்துக் கொள்ள இப்படி ஒவ்வொரு கல்லாக திரைப்படத்தின் மூலமும் நகர்த்துவோம்.

நன்றிகளுடன்..

வித்யாசாகர்

Posted in திரை விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | மறுமொழியவும்

38) பத்தோடு ஒன்னு பதினொன்னு; பரதேசி..

1
ன்று நாளை என
வாங்க செருப்பில்லாமலே தேய்ந்த கால்கள்
சில்லறையில் வாங்கிய ஊறுகாய் தவிர்த்து
குழம்பு காணாத சோறு
வளையிடாமலேயே வணக்கமிட்ட கைகள்
தைத்த ஆடை உடுத்தாமலேயே சுருங்கிய தோல்
பொட்டலம் பிரிக்கையில் மட்டுமேப் படித்த படிப்பு
பாதுகை கைகடிகாரம் அலைபேசி வானொலி மிதிவண்டி
ருசியான உணவு என -
இன்னபிற எல்லாமே கனவாகவே போன வாழ்க்கை;

இறந்த பின் மட்டும் இயந்திரத்தில் எரியுமுடல்!!
——————————————————

2
ரு குருடி
ஒரு முடவன்
ஒரு விதவை
ஒரு மலடன்
ஒரு அனாதை
ஒரு பரதேசி
ஒரு நோயாளி
ஒரு முதிர்கன்னி
இவர்களைச் சுற்றியிருக்கும் நம் உலகில்
கேட்கும் சிரிப்புச் சப்தம் அசிங்கமானது;

அல்லது அவர்கள் தொலைத்த சிரிப்பிற்கு
காரணமானது!
——————————————————

3
சு
டுகாட்டில்
நிறைய மண்டையோடுகள் கிடந்தன
எதிலுமே ஜாதியில்லை மதமில்லை;

அதை எரித்தவர் மேல்
திணிக்கப்பட்டிருந்தது
ஜாதியும் மதமும்!
——————————————————

4
பி
ச்சையெடுப்பது தவறெனில்
கொடுப்பதும் தவறு -
கோசம் எழுப்பினார்கள்;

சற்று தூரத்தில்
ஒரு வயது முதிர்ந்த பாட்டி
மயக்கத்தில் கிடந்தாள்..

பிச்சைப் பாத்திரத்தில்
அவள் அனாதை என்று எழுதப்பட்டிருக்கவில்லை..
——————————————————

5
தே
னிரில் முக்கி பொறையும் பன்னும்
தின்றுக் கொண்டிருந்தன பிள்ளைகள்

அப்பா ஒரு குவோட்டரில் மூழ்கி
ஆஃபில் வெளிவந்து
ஒரு ஃபுல்லோடு ஆடி ஆடி வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார்

அம்மாவிற்கு பசி நெஞ்சிலும் இருந்தது

அவளைப் பற்றிக் கவலைப் பட
அவள்கூட இல்லை

அவளுக்கு பிள்ளைகளே பெருங் கவலை
அவர்களை அவள்
தான் செய்த
இரண்டாம் பாவமாக எண்ணிக் கொண்டிருந்தாள்

அவர்களுக்கு ஒரு மினர் தேனீரோ
ஒரு முழுதாகக் கிடைத்த பன்னோக் கூட
பெரிதாக இருந்தது

அதெல்லாம் தெரியாமலே
அடுத்தத் தெருவரை பேசிக் கொண்டது ஊர்
அதுக ‘குடிகாரன் பிள்ளைகள்’ என்று

கொடுக்க வக்கில்லாதவர்கள் அவர்கள்

பாவம்
குழந்தைகளின் வயிற்றில்
பன்னும் தேநீரும் மட்டுமே எழுதப் பட்டிருந்ததைப்
பற்றி அவர்களுக்கு எந்த கவலையுமில்லை

அம்மாவிற்கு அது கூட இல்லை…
தாலியை சுமப்பதற்குப் போராடவே
பெரியவளானவள் அவள்

அப்பா வரும் தெருவைப் பார்த்து
ஓடிக் கொண்டிருந்தாள்

அவளுக்கு அப்பா மட்டுமே உலகம்
குடித்தாலும் கொன்றாலும்
அவர் மட்டுமே கடவுள்

பாழாய்ப்போன கடவுளும்
சமூகமும்..

போகட்டும்
யார் எப்படி வேண்டுமோப் போகட்டும்
யாரைப் பற்றியுமே கவலையில்லாத அப்பா

அப்பாவிற்கு தான்
அவளும்
அவர் கையிலிருந்த பாட்டிலும்
வேறு வேறாகவேயில்லை..
——————————————————
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | 3 மறுமொழிகள்

33) கவிதையில்லாத பொழுது..

ரு நெடுமரத்தின் இலைகள்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து
வேரறுபடும் நிலை;

மண் வாரி முகத்திலெறிய
நெருப்பு விழுந்து குழி குழியான கதியாய்
உணர்வுகள் அறுபட்டு வலிக்குமொரு ரணம்;

உயிர் முடிச்சவிழ்ந்து
துடித்து துடித்தடங்கும் உடல் சரிவில்
ஒரு விளக்கு அணைந்த இருட்டு;

அனல் காற்றில் வெப்பமேறி
வெடித்துச் சிதறி மண்ணில் புதையுண்ட
விதையின் சிறுமுளை துளிர்த்த உயிர்ஜனிக்கும் வலி;

மழை சொட்டி சொட்டி நனைந்த வீட்டில்
பற்றியெரியும் -
பாலூட்டப் படாத வயிறு;

பொக்கைவாய் பற்களில் மெல்லக்
கனவுகளின்றி -
மரணத்தின் பசியூறும் தருணம்;

கடல்மீன்கள் வறுபடும் வாணலியில்
வறுபடாமலே -
துடிக்குமென் உயிர்;

அஞ்சறைப் பெட்டி திறந்து சில்லறை தேடி
ஒற்றை ரூபாய் நாணயமெடுத்து நெற்றியில் ஒட்டி
நான் படுத்துக் கொள்ளுமொரு காலை;

இப்படி வலியின் வாசல்களெல்லாம்
தேடியலைந்த கண்களுக்கு -
இதுவரைக் கிடைக்கவேயில்லை – அந்த ஒரு கவிதை!!
—————————————————–
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 மறுமொழிகள்